settings icon
share icon
கேள்வி

இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன?

பதில்


இரட்சிப்பு என்றால் மீட்பு. எல்லா உலக மதங்களும் நாம் மீட்படைய வேண்டும் என்று கற்பிக்கின்றன, ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் நமக்கு என்ன தேவை அல்லது எதிலிருந்து மீட்படைய வேண்டும் என்பதைப் பற்றி வேறுபட்ட புரிந்துணர்வு கொண்டுள்ளன, அதாவது நாம் ஏன் மீட்படைய வேண்டும், எப்படி மீட்பு கிடைக்கும் அல்லது அடைய முடியும் போன்ற காரியங்களில் வேறுபடுகின்றன. இருப்பினும், ஒரே ஒரு இரட்சிப்பின் திட்டம் மட்டுமே இருப்பதாக வேதாகமம் தெளிவுபடுத்துகிறது.

இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான விஷயம், அது மனிதனின் திட்டம் அல்ல மாறாக தேவனின் திட்டம் என்பதாகும். மனிதகுலத்தின் இரட்சிப்பின் திட்டம் என்பது மத சடங்குகளை ஆசரிப்பது அல்லது சில கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது அல்லது ஆவிக்குரிய அறிவொளியின் சில நிலைகளை அடைவது போன்றவைகளில் அடங்கியுள்ளது. ஆனால் இவற்றில் ஒன்றும் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தின் பாகமாக இல்லை.

தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் – ஏன்

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில், முதலில் நாம் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே எளிய நிலையில் கூறுவோமானால், நாம் பாவம் செய்ததால் நாம் இரட்சிக்கப்பட வேண்டும். எல்லோரும் பாவம் செய்ததாக வேதாகமம் கூறுகிறது (பிரசங்கி 7:20; ரோமர் 3:23; 1 யோவான் 1:8). பாவமானது தேவனுக்கு விரோதமாக கலகமாக இருக்கிறது. தவறான காரியங்களைச் செய்வதற்கு நாம் அனைவரும் தீவிரமாக செயல்படுகிறோம். பாவம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும், நம்மையும் சேதப்படுத்துகிறது, மிக முக்கியமாக தேவனை கனவீனப்படுத்துகிறது. தேவன் பரிசுத்தமும் நீதியுமுள்ளவராக இருக்கிறபடியினால், அவர் பாவத்தை தண்டிக்காமல் அப்படியே கண்டுகொள்ளாமல் இருக்கமாட்டார் என்றும் வேதாகமம் போதிக்கிறது. பாவத்திற்கான தண்டனை மரணம் (ரோமர் 6:23) மற்றும் தேவனிடமிருந்து நித்தியமாக பிரிந்திருத்தல் (வெளிப்படுத்துதல் 20:11-15). தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் இல்லாமல், நித்திய மரணமே ஒவ்வொரு மனிதனின் விதியாக இருக்கிறது.

தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் – என்ன

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில், தேவன் மட்டுமே நம் இரட்சிப்பை நமக்கு வழங்க முடியும். நம்முடைய பாவம் மற்றும் அதன் விளைவுகளின் நிமித்தமாக நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாது. தேவன் இயேசு கிறிஸ்துவில் மனிதனாக ஆனார். தேவன் மனித சரீரத்தை எடுத்தார், நம் மத்தியில் வாழ்ந்தார், நமக்கு கற்ப்பித்தார் (யோவான் 1:1, 14). இயேசு பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார் (2 கொரிந்தியர் 5:21, எபிரெயர் 4:15, 1 யோவான் 3: 5) மற்றும் அவரையே நமக்காக பரிபூரணமான பலியாக கொடுத்தார் (1 கொரிந்தியர் 15:3; கொலோசெயர் 1:22; எபிரெயர் 10:10). இயேசு கிறிஸ்து தேவனாக இருப்பதால் அவரது மரணத்திற்கு ஒரு நித்திய மற்றும் எல்லையற்ற மதிப்பு இருந்தது. சிலுவையில் இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கு பரிபூரணமானதும் முழுமையானதுமான விலைக்கிரயமாக இருந்தது (1 யோவான் 2:2). நாம் அடையவேண்டிய பாவத்தின் விளைவான தண்டனையை அவர் தம்மேல் எடுத்துக்கொண்டார். மரித்தோரிலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதல், அவருடைய மரணம் உண்மையிலேயே பாவத்திற்கு பரிபூரணமான பலியாக இருந்தது என்பதை நிரூபித்தது.

தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் – எப்படி

அப்போஸ்தலர் 16:30-ல் அப்போஸ்தலனாகிய பவுலைப் பார்த்து இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று ஒரு மனிதன் கேட்டான். அதற்கு பவுல் மறுமொழியாக, “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” (அப்போஸ்தலர் 16:31) என்று கூறினார். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை பின்பற்றுவதற்கான வழி விசுவாசிப்பதே ஆகும். அதுவே ஒரே ஒரு தேவையாயிருக்கிறது (யோவான் 3:16; எபேசியர் 2:8-9). இயேசு கிறிஸ்துவின் வழியாக நம் இரட்சிப்புக்காக தேவன் அளித்திருக்கிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம் விசுவாசத்தினாலே இயேசுவை மட்டுமே இரட்சகராக முழுமையாக நம்பி அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12). இது தான் தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்.

தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் - நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்களா?

நீங்கள் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை பின்பற்ற விரும்பினால், இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக விசுவாசிக்க வேண்டும். பாவத்தைத் தழுவி, பாவத்தை நிராகரித்து, இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனைத் தழுவிக்கொள்வதன் மூலம் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பாவங்களுக்காக பரிபூரணமான மற்றும் முழுமையாக விலைக்கிரயம் செலுத்துபவராகிய இயேசுவின் பலியில் முழு நம்பிக்கை வைக்கவேண்டும். நீங்கள் இதை செய்தால், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று தேவனுடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது, உங்கள் பாவங்களும் உங்களுக்கு மன்னிக்கப்படும், நீங்கள் பரலோகத்தில் உங்கள் நித்தியத்தைச் செலவிடுவீர்கள். இதையல்லாமல் வேறே முக்கியமான முடிவு என்று எதுவுமில்லை. உங்கள் விசுவாசத்தை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் இன்றே வையுங்கள்!

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries
OSZAR »